June 3, 2013

கரூர் ஸ்பெஷல் ’கரம்’



கரம் என்ற சிற்றுண்டி மாலை வேளையில் கரூரில் அநேக இடங்களில் தள்ளு வண்டி கடைகளில் கிடைக்கும் ஒரு காரமாண உணவுப்பொருள்.

ஒரு கப் பொரியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் சட்னி(காரம் அதிகமாக),கார சட்னி,மல்லி சட்னி,சிறிதளவு பீட்ருட் துருவல், முறுக்கு,மிச்சர் சேர்ந்த கலவையே கரம் எனப்படும்,

இது மிகவும் காரமாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ள உணவுப்பொருள்.நாள் முழுவதும் உழைத்து களைத்து பசியுடன் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் வாங்கி சாப்பிடும் சுகமே தனி.



இதனுடன் அவித்த முட்டையை பொடியாக நறுக்கி சேர்த்தால் ’’முட்டை கரம்’’ என்றும்,பொரிக்கு பதிலாக குடல் அப்பளம் சேர்த்தால் ’’அப்பள கரம்’’ என்றும்,பொரிக்கு பதில் சமோசா சேர்த்தால் ‘’சமோசா கரம்’’ என்று பல விதங்களில் கிடைக்கிறது.

அத்துடன் அந்த தள்ளுவண்டி கடைகளில் இரண்டு தட்டுவடைகளுக்கு(சீடை) நடுவில் கொஞ்சம் வெங்காயம் கார சட்னி,தேங்காய் சட்னி வைத்து தருவார்கள்.இதற்கு ’’செட்’’ என்று பெயர்.இதை அப்படியே வாங்கி மொறுக் மொறுக்கென்று சாப்பிடும் சுவையே சுவைதான்.

இவற்றின் விலையும் ஒன்றும் அதிகம் இருக்காது கரம் விலை ரூ.12-15க்குள் தான் இருக்கும்.’’செட்’’ ஒன்றின் விலை ஒன்று 2 ரூபாய்தான்.

மேலும் இது சரக்கிற்கு ஏற்ற சிறந்த சைட்-டிஷ் ஆக விளங்குவதால் இங்கு உள்ள ஹை-க்ளாஸ் பார்களில் கரம் சைட்-டிஷ் ஆக தரப்படுகிறது(அது உனக்கு எப்பிடி ராசா தெரியும்னு கேக்காம மேல படிங்க).

கரூரில் மையப்பகுதியில் சுமாராக அரை கிலோ மீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று தள்ளுவண்டி கடைகளாவது இருக்கும்.

இதன் ருசிக்கு அடிமையாகி தினமும் வாங்கி சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைதான் வரும்.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

இந்த கரம் சேலம் ஈரோடு மற்றும் கோபியில் ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டாலும் கரூரே இதற்கு ஃபேமஸ் ஆக விளங்குகிறது.

பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவுப்பொருள்களில் இதுவும் ஒன்று.!!

(Poto Credits:கோவை நேரம்)

1 comment:

  1. கண்டிப்பாக அனைவரும் சுவைக்க வேண்டிய உணவு.

    ReplyDelete